கிழக்கு ஆப்ரிக்காவில் திருச்சபை வளர்ந்து வருகிறது – மலாவி பேராயர்
ஜூலை05,2011. கிழக்கு ஆப்ரிக்காவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் குறிப்பிட்டுச் சொல்லும்
அளவுக்கு தலத்திருச்சபைகளில் முன்னேற்றங்கள் இடம் பெற்றுள்ளன என்று பேராயர் தர்ச்சீசியோ
ஜியாயே , கூறினார். கென்ய நாட்டு நைரோபியில் நடைபெற்ற AMECEA கூட்டமைப்பின் பொன்விழாத்
திருப்பலியில் மறையுரையாற்றிய பேராயர் ஜியாயே, கிழக்கு ஆப்ரிக்காவில் 1961ல் 47 ஆக இருந்த
மறைமாவட்டங்கள் தற்போது 119 ஆக வளர்ச்சி கண்டுள்ளது என்றார். 1961ல் 53 இலட்சத்து
71 ஆயிரமாக இருந்த கத்தோலிக்கரின் எண்ணிக்கை தற்போது ஐந்து கோடியாக உயர்ந்துள்ளது என்றும்
உரைத்த அவர், தலத்திருச்சபையின் மீது பற்றுதல் கொண்டு அதன் வளர்ச்சியில் ஆர்வம் காட்டும்
பொதுநிலையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் சுட்டிக் காட்டினார். AMECEA
என்பது, எரிட்ரியா, எத்தியோப்பியா, கென்யா, மலாவி, சூடான், டான்சானியா, உகாண்டா, ஜாம்பியா
ஆகிய எட்டு கிழக்கு ஆப்ரிக்க நாடுகளின் ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பாகும். சொமாலியா, திஜிபுத்தி
ஆகிய நாடுகளின் ஆயர் பேரவைகளும் இதில் உறுப்பினர்களாக உள்ளன