2011-06-29 15:37:07

பாகிஸ்தானில் சிறுபான்மை அமைச்சகத்தை இரத்து செய்வது அடக்குமுறைகளுக்கு உதவக்கூடும், திருச்சபை கவலை


ஜூன்29,2011. பாகிஸ்தானில் சிறுபான்மை மதங்களுக்கான அமைச்சகத்தை இரத்து செய்வதற்கான அரசின் திட்டம், அந்நாட்டில் அடக்குமுறைகளுக்குப் பச்சைக் கொடி காட்டுவதற்கு வழி அமைக்கும் என்று திருச்சபை வட்டாரங்கள் கவலை தெரிவித்தன.
பாகிஸ்தானில் சிறுபான்மை அமைச்சகத்தை மாநில வாரியாகப் பிரிப்பதற்கானப் பரிந்துரைகள் குறித்து திருச்சபை கவலை அடைந்துள்ளதாகக் கூறிய லாகூர் அருட்பணியாளர் ஒருவர், இதன்மூலம் கிறிஸ்தவர்களின் உரிமைகள் தேசிய அரசியல் திட்டத்திலிருந்து இருட்டடிப்புச் செய்யப்பட்டு விடும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், இசுலாம் அடிப்படைவாதிகள் புதிய கொடுஞ்செயல்களில் ஈடுபடுவதற்குப் பச்சைக் கொடி காட்டுவதாகவும் இது இருக்கும் என்றும் அவர் கூறினார்.
கடைசி நிமிட மாற்றங்கள் இடம் பெறவில்லையெனில் பாகிஸ்தான் அரசு இந்தத் திட்டங்களை ஜூலை ஒன்றாந்தேதியிலிருந்து செயல்படுத்த ஆரம்பித்து விடும் என்றும் அக்குரு ஃபீடெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்







All the contents on this site are copyrighted ©.