ஒரே பாலினத் திருமணங்கள் சட்டத்திற்கு நியுயார்க் ஆயர்கள் எதிர்ப்பு
ஜூன்29,2011. திருமணம் குறித்து மனித வரலாற்றில் காலம் காலமாய்ப் புரிந்துகொள்ளப்பட்ட
கூறுகளை மாற்றும் மசோதாவுக்கு நியுயார்க் மாநிலம் அங்கீகாரம் அளித்திருப்பது தங்களுக்கு
மிகுந்த கவலையையும் ஏமாற்றத்தையும் அளித்திருப்பதாக அம்மாநிலத்தின் எட்டு கத்தோலிக்க
ஆயர்கள் கூறினர். நியுயார்க் பேராயர் திமோத்தி டோலன் மற்றும் பிற ஆயர்கள் இணைந்து
வெளியிட்ட அறிக்கையில், கத்தோலிக்கத் திருச்சபையின் தெளிவான போதனையின்படி, ஒரே பாலினச்
சேர்க்கையில் ஈடுபட்டுள்ள சகோதர சகோதரிகளை மதிக்கிறோம், அதேசமயம் திருமணம் என்பது ஓர்
ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே வாழ்வு முழுவதும் ஏற்படும் பந்தம் என்பதையும் உறுதியுடன்
வலியுறுத்துகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிக்கும்
நியுயார்க் மாநில அரசின் நடவடிக்கை, திருமணம் மற்றும் குடும்பத்தின் அடிப்படை விழுமியங்கள்
குன்றிப்போகக் காரணமாக அமையும் என்று ஆயர்கள் எச்சரித்துள்ளனர்