போதைப்பொருள் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட அழைப்பு விடுக்கிறது கோவா தலத்திருச்சபை
ஜூன் 27, 2011. கோவா மாநிலத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து
வருவதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என மாநில அரசுக்கு விண்ணப்பம்
ஒன்றை விடுத்துள்ளது அம்மறைமாவட்டத்தின் சமூக நீதி மற்றும் அமைதி அவை. சட்ட விரோத
போதைப்பொருட்கள் மற்றும் அளவுக்கு மீறிய மதுபானம் அருந்தல் போன்றவைகளைக் கட்டுப்படுத்த
அரசு தவறியுள்ளதன் மூலம் சுற்றுலாப் பயணிகளிடையேயான போதைப்பொருள் தொடர்புடைய மரணங்களுக்கும்
குடும்பப் பிரச்னைகளுக்கும் காரணமாகியுள்ளது எனக்கூறும் இந்தக் கத்தோலிக்க அவை, கோவா
மாநிலமானது போதைப்பொருட்களின் புகலிடமாகவும் காவல்துறைக்கும் போதைப்பொருட்களுக்கும் தொடர்புடைய
மாநிலமாகவும் செய்திகளில் வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளது. சுற்றுலாவை ஊக்குவிக்கிறேன்
என்ற போர்வையில் போதைப்பொருள் பயன்பாட்டையே அரசு ஊக்குவித்து வருவதாக குற்றஞ்சாட்டிய
இந்த சமூக நீதி மற்றும் அமைதி அவையின் உயர் செயலர் குரு மவெரிக் ஃபெர்னாண்டோ, இலாபத்தையே
நோக்கமாகக் கொண்டிருக்கும் அரசும் தனியார் நிறுவனங்களும் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான
மீட்புத் திட்டங்களில் எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.