2011-06-24 15:30:22

திருத்தந்தை : திருநற்கருணை, கிறிஸ்துவுக்காகவும் பிறருக்காகவும் வாழ்வதற்கு உதவுகிறது


ஜூன்24,2011. திருநற்கருணை, மனிதனை இயேசுவின் இறைவாழ்வில் ஐக்கியமாக்குகிறது மற்றும் அவன் இயேசுவின் அடிச்சுவடுகளை மிக நெருக்கமாகப் பின்செல்லவும் பிறருக்குக் கொடையாக மாறவும் உதவுகிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வத்திக்கானில் இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட இயேசுவின் திருஉடல் மற்றும் திருஇரத்தத்தின் பெருவிழா திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, நாம் கிறிஸ்துவுக்காகவும் பிறருக்காகவும் வாழ்வதற்கு திருநற்கருணை உதவுகிறது என்றார்.
இந்த மாற்றம் தற்போதைய உலகுக்கு மிகவும் தேவைப்படுகிறது என்றும், இது விண்ணக அரசை நமக்குத் திறந்து வைக்கின்றது என்றும் அவர் கூறினார்.
கிறிஸ்து, அன்பின் காரணமாக அனைத்துத் துன்பங்களையும் வன்முறையையும் ஏற்று சிலுவைச் சாவை ஏற்றார், இந்தத் தியாக அன்பே கிறிஸ்தவ வாழ்வுக்கானக் கிறிஸ்துவின் மேல்வரிச்சட்டமாக இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இயேசுவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழா திருப்பலியானது தூய ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் இவ்வியாழன் மாலை நடைபெற்றது. அதன்பின்னர் அப்பசிலிக்காவிலிருந்து தூய மேரி மேஜர் பசிலிக்காவுக்குத் திருநற்கருணை பவனியும் இடம் பெற்றது. திருத்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இப்பவனியில் பல்லாயிரக்கணக்கானப் பக்தர்கள் கலந்து கொண்டனர்.







All the contents on this site are copyrighted ©.