2011-06-23 11:10:02

ஜூன் 24 வாழ்ந்தவர் வழியில்.....


1927 ம் ஆண்டு ஜூன் 24 ம் தேதி பிறந்த கவியரசு கண்ணதாசன் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை இயேசு காவியம் என்ற தலைப்பில் காவிய வடிவில் எழுதியவர். அதனை இறவாக் காவியம் என்றும் அழைத்தவர். இந்நூல் கண்ணதாசன் எழுதிய கடைசி நூலாகவும் கருதப்படுகிறது. கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர்களை மானசீகக் குருவாகக் கொண்டவர். அர்த்தமுள்ள இந்து மதம் என்ற தலைப்பில் பத்துப் பாகங்களில் இவர் எழுதிய நூல்கள் வெளிவந்துள்ளன. இவை தவிர கவிஞர் கண்ணதாசன் பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளார், அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார். கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்றும் உள்ளது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. கவியரசு கண்ணதாசன் உடல்நிலை காரணமாக 1981ம் ஆண்டு ஜூலை 24 ம் தேதி சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே ஆண்டு அக்டோபர் 17 ம் தேதி சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார்.








All the contents on this site are copyrighted ©.