திருத்தந்தையின் 60ம் ஆண்டு குருத்துவப்பணி நிறைவையொட்டி, 60 மணி நேர
நற்கருணை ஆராதனைக்கு அழைப்பு
ஜூன் 22,2011. ஜூன் 29 வருகிற புதனன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் குருத்துவப் பணியின்
60ம் ஆண்டை நிறைவு செய்வதையொட்டி, குருக்கள் 60 மணி நேர நற்கருணை ஆராதனையில் ஈடுபடுமாறு
குருக்களுக்கானத் திருப்பேராயம் அழைப்பு விடுத்துள்ளது. இத்திருப்பேராயத்தின் தலைவர்
கர்தினால் Mauro Piacenzaவும், செயலர் பேராயர் Celso Morga Iruzubietaவும் கையெழுத்திட்டு
அனுப்பியுள்ள இந்த அழைப்பில், குருக்கள் தங்களை இன்னும் புனிதத்துவத்தில் வளர்க்கவும்,
குருத்துவப் பணியை மேற்கொள்ள இன்னும் பல இளையோர் முன் வரவும் இந்த ஆராதனைகளை மேற்கொள்ளுமாறு
கூறப்பட்டுள்ளது. இந்த ஆராதனை நேரங்கள் தொடர்ந்த ஒரு முயற்சியாகவோ அல்லது இடைவெளி
விட்டு மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியாகவோ இருக்கலாம் என்றும், ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்படும்
இந்த முயற்சிகள் ஜூலை மாதம் முதல் தேதி, குருக்களுக்கான செப நாளான இயேசுவின் திரு இருதயத்
திருநாள் அன்று முடிவடைவது பொருத்தமாக இருக்கும் என்றும் இவ்வழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த
ஆராதனை வழிபாட்டின்போது, திருத்தந்தையின் உடல் நலம், மற்றும் அவரது மகிழ்வான சேவை ஆகியவைகளுக்காக
வேண்டும் அதே நேரத்தில், திருச்சபையில் பணியாற்றும் ஆயர்கள், குருக்கள், தியாக்கொன்கள்
மற்றும் நற்செய்திப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்காகவும் வேண்டும்படி கோரப்பட்டுள்ளது.