திருத்தந்தையின் குருத்துவத் திருநிலைப்பாட்டின் 60ம் ஆண்டு விழா ஒரு மகிழ்ச்சி கொண்டாட்டம்
ஜூன் 21, 2011. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் குருத்துவத் திருநிலைப்பாட்டின் 60ம் ஆண்டு
விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாட அகில உலகத் திருச்சபையும் தயாரித்து வருவதாக அறிவித்தார்
திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி. இம்மாதம் 29ம் தேதி
திருத்தந்தை தன் குருத்துவ திருநிலைப்பாட்டின் 60ம் ஆண்டை சிறப்பிக்க உள்ள நிலையில்,
உலகின் அனைத்து மறைமாவட்டங்களும் தேவஅழைத்தலுக்கென திருநற்கருணை ஆராதனை வழிபாடுகளுடன்
சிறப்பான விதத்தில் செபிக்குமாறு குருக்களுக்கான திருப்பேராயம் அனைத்து ஆயர் பேரவைகளுக்கும்
கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார் குரு லொம்பார்தி. திருத்தந்தையின் வாழ்வு
உண்மையிலேயே ஒரு குருத்துவ வாழ்வாக இருந்தது என்ற திருப்பீடப் பேச்சாளர், குருத்துவம்
குறித்து திருத்தந்தை இதுவரை வழங்கியுள்ள கருத்துக்கள் அனைத்தும் அவர் பெற்ற இறை அருளின்
ஆழ்ந்த அனுபவத்திலிருந்து வந்துள்ளன என மேலும் கூறினார்.