பிரம்மபுத்ரா நதியைத் திசைத் திருப்பும் சீன அரசின் முயற்சியால் இந்தியாவும், பங்களாதேஷும்
கவலை
ஜூன் 20,2011. சீனாவின் Xinjiang பகுதியில் நிலவும் வறட்சியைப் போக்க, பிரம்மபுத்ரா நதியைத்
திசைத் திருப்பும் முயற்சியில் சீன அரசு இறங்கியிருப்பது குறித்து இந்தியாவும், பங்களாதேஷும்
தங்கள் கவலைகளை வெளியிட்டுள்ளன. ஆசியாவின் பெரும் நதிகளில் ஒன்றான பிரம்மபுத்ரா 3000
கிலோமீட்டர் நீளம் கொண்டது. இது சீனாவின் ஒரு பகுதியென்று கருதப்படும் தெற்கு திபெத்தில்
உருவாகி, இமயமலை வழியாக இந்தியாவில் பாய்ந்து, இறுதியில் பங்களாதேஷில் கடலில் கலக்கிறது. கடந்த
நவம்பர் மாதம் இந்த நதியில் ஒரு மாபெரும் அணையை கட்டி, அதன் வழி உலகிலேயே மிக அதிக அளவு
மின்சக்தியை உருவாக்கும் ஒரு திட்டத்தை சீன அரசு அறிவித்திருந்தது. தற்போது சீன அரசு
கூறிவரும் திட்டத்தின் மூலம், பிரம்மபுத்ரா நதியைத் திசைத் திருப்பும் முயற்சியாக, சீன
அரசு இன்னும் ஒரு சில அணைகளை இந்நதியில் கட்டி வருவதற்கு இந்தியாவும், பங்களாதேஷும் தங்கள்
எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. சீன அரசின் இந்த நடவடிக்கையால் ஒன்றையொன்று அடுத்திருக்கும்
இந்நாடுகளில் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் அதிகம் இருக்கும் என்று இந்தியாவும், பங்களாதேஷும்
கூறி வருகின்றன.