கொரிய நாடுகளிடையே ஒப்புரவு வளர தென் கோரியக் கத்தோலிக்கர்கள் ஒப்புக்கொடுத்தத் திருப்பலி
ஜூன் 18,2011. வட மற்றும் தென் கொரிய நாடுகளிடையே ஒப்புரவு வளர வேண்டும் என்று தென் கோரியக்
கத்தோலிக்கர்கள் திருப்பலி ஒன்றை இவ்வெள்ளியன்று நிறைவேற்றினர். 20000 விசுவாசிகள்
கலந்து கொண்ட இத்திருப்பலியை Cheju மறைமாவட்ட ஆயர் Peter Kanga U-il தலைமையேற்று நடத்த
200 குருக்களுக்கும் மேல் இந்தக் கூட்டுத் திருப்பலியில் கலந்து கொண்டனர். வட கொரியாவில்
நிலவி வரும் வறுமை, பட்டினி ஆகிய செய்திகளும், இரு நாடுகளில் வாழும் குடும்பங்களுக்கிடையே
நிலவும் பிரிவுகளும் தென் கொரிய மக்களைப் பாதிக்கின்றன என்று ஆயர் தன் மறையுரையில் கூறினார். இவ்விரு
கொரிய நாடுகளுக்கிடையே தற்போது நிலவி வரும் பிரச்சனைகளைத் தீர்க்க, செபமும் திருப்பலியுமே
சிறந்த வழிகள் என்பதை கத்தோலிக்கர்கள் உணர்ந்து வருகின்றனர் என்று இத்திருப்பலியை ஏற்பாடு
செய்திருந்த அருள்தந்தை Timothy Lee Eun-hyung கூறினார். கொரிய கத்தோலிக்க ஆயர் பேரவையின்
ஒப்புரவுப் பணிக்குழுவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இத்திருப்பலி கடந்த எட்டு
ஆண்டுகளாக நடைபெறவில்லை என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.