சிரியாவில் வன்முறைகள் களையப்பட்டு ஒப்புரவு இடம்பெற அழைப்பு விடுக்கிறது திருப்பீடம்
ஜூன் 14,2011. சிரியாவில் வன்முறைகள் தொடர்வதால், பேச்சுவார்த்தைகளில் மக்கள் நம்பிக்கை
இழப்பதுபோலத் தோன்றினாலும், அந்நாட்டில் பேச்சுவார்த்தைகள், ஒப்புரவு மற்றும் அமைதி இடம்பெறவேண்டும்
என திருப்பீடம் நம்பிக்கையுடன் தொடர்ந்து அழைப்புவிடுத்து வருவதாக அறிவித்தார் திருப்பீடப்
பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி. உயரிய ஒரு நாகரீகத்தைப் பெறும் நோக்கில்,
சிரியாவில் விடப்பட்ட அழைப்புகள் வன்முறையைத் தூண்டியுள்ளதுடன், மதங்களுக்கிடையேயான உரசல்களையும்
நாட்டின் நிலையான தன்மைக்கு ஆபத்தையும் கொணரும் அச்சம் உள்ளது என்றார் குரு லொம்பார்தி. வன்முறைகளைக்
கைவிடவும், கருத்துச் சுதந்திரத்தையும், சுதந்திரப் பங்ககேற்பையும் அனுமதிக்கவும், பேச்சுவார்த்தைகளை
மேற்கொள்ளவும் சிரியாவின் அனைத்துத் தரப்பினருக்கும் திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்
எனவும் கூறினார் இயேசு சபை குரு லொம்பார்தி. ஒரு நாட்டின் நிலையானத்தன்மை அசைக்கப்படுவதும்,
நாட்டை விட்டு வெளியேற மக்கள் தள்ளப்படுவதும் தடைச்செய்யப்படவேண்டும் என மேலும் அழைப்பு
விடுத்தார் திருப்பீடப்பேச்சாளர் இயேசு சபை குரு லொம்பார்தி.