லாகூர் உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் லாரன்ஸ் சல்தானாவுக்குப் பிரியாவிடை
ஜூன் 13,2011. பாகிஸ்தானில் லாகூர் பேராலயத்தில் அண்மையில் நடைபெற்ற ஒரு திருப்பலியில்
லாகூர் உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் லாரன்ஸ் சல்தானாவுக்குப் பிரியாவிடை வழங்கப்பட்டது. பாகிஸ்தானுக்கான
திருப்பீடத் தூதர் பேராயர் Edgar Pena Perraவின் தலைமையில், நடைபெற்ற இத்திருப்பலியில்
500க்கும் மேற்பட்ட விசுவாசிகளும் 60 குருக்களும் கலந்து கொண்டனர் என்று UCAN செய்தி
நிறுவனம் கூறியுள்ளது. 2001ம் ஆண்டு நியூயார்க் நகரில் இரு வர்த்தகக் கோபுரங்கள் தாக்கப்பட்ட
செப்டம்பர் 11ம் தேதி பேராயராக தான் திருநிலைப்படுத்தப்பட்டதை நினைவு கூர்ந்த பேராயர்
சல்தானா, இந்தத் தாக்குதல்களுக்குக் காரணம் என்று கூறப்படும் பின் லேடன், தான் பொறுப்பிலிருந்து
விலகிய ஒரு சில நாட்களில் இறந்ததையும் சுட்டிக் காட்டினார். பேராயர் லாகூரில் தன்
பணியை மேற்கொண்ட காலம் பாகிஸ்தான் தலத்திருச்சபையின் போராட்டம் சூழ்ந்த காலம் என்று கூறிய
திருப்பீடத் தூதர் பேராயர் Perra, இந்தப் போராட்டங்களில் பேராயர் காட்டிய துணிவும், விசுவாசமும்
பாராட்டுதற்குரியது என்றும் கூறினார்.