திருத்தந்தை: நாடுகளிடையே ஐக்கியத்திற்குத் தயாரிக்கிறார் தூய ஆவியார்
ஜூன் 13,2011. பெந்தகோஸ்து விழாவில் நாம் சிறப்பித்த தூய ஆவி, அகிலத்தையும் நிறைத்து,
நாடுகளிடையே ஐக்கியத்திற்குத் தயாரிப்பாராக என, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது நம்பிக்கையை
வெளியிட்டார் திருத்தந்தை. பாஸ்கா மறையுண்மையின் நிறைவாக தூய ஆவி, அன்னை மரியோடு கூடியிருந்த
திருத்தூதர்கள் மீது இறங்கி வந்தது, திருச்சபைக்கான திருமுழுக்காக இருந்தது எனவும் கூறினார்
அவர். அப்போஸ்தலர்களின் மனித மொழியை இறைவனின் குரல் தெய்வீகமாக்கியது என்ற பாப்பிறை,
தூய ஆவியின் மூச்சுக்காற்று அகிலத்தையும் நிறைத்து, விசுவாசத்தை ஊற்றெடுக்க வைத்து, உண்மையைக்
கொணர்ந்து, நாடுகளிடையே ஐக்கியத்தையும் வளர்க்கிறது என்றார். செபத்திற்கு அர்த்தத்தை
தரவும், நற்செய்திப் பணிக்கான ஆர்வத்தைத் தூண்டவும், நற்செய்தியைக் கேட்பவரின் இதயங்கள்
கொழுந்து விட்டு எரியவும், கிறிஸ்தவ கலையும் வழிபாட்டு இசையும் தூண்டப்படவும் தூய ஆவியே
உதவுகிறார் எனவும் தன் ஞாயிறு மூவேளை செப உரையின் போது கூறினார் பாப்பிறை.