ஜூன் 06,2011. எய்ட்ஸ் நோய் பற்றி முதல் முதலாக தகவல் வெளியாகி இஞ்ஞாயிறோடு முப்பது ஆண்டுகள்
நிறைவடைகின்றன. 1981ஆம் வருடம் ஜூன் 5ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ்
ஏஞ்சலஸ் நகரில், ஐந்து நோயாளிகளை விநோதமான ஒரு நோய் தாக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பின்னர் இரண்டு வருடங்கள் நடைபெற்ற ஆய்வுகளுக்குப் பின்னரே எய்ட்ஸ் நோய்க்கு
காரணமான ஹெச்.ஐ.வி. கிருமி அடையாளம் காணப்பட்டது. பின்னர், படிப்படியாக எய்ட்ஸ் நோயினால்
ஏற்படுகின்ற பாதிப்புகளைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் Antiretroviral மருந்துகள்
கண்டுபிடிக்கப்பட்டன. அதிகாரப்பூர்வமான தகவல்களின்படி, உலக அளவில் எய்ட்ஸ் நோயால்
உயிரிழந்தவர்கள் இதுவரை சுமார் மூன்று கோடி. ஆனால் இந்த நோயின் பாதிப்புகள் உச்சத்துக்கு
சென்ற காலகட்டங்கள் முடிந்துவிட்டன. அப்படியான நிலைமை இனி வராது என்ற நம்பிக்கை சுகாதாரத்துறை
அதிகாரிகளுக்கு தற்போது வந்துள்ளது. ஐ.நா. அவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் அண்மையக்
கூற்றுப்படி, உலகின் பல நாடுகளில் ஹெச்.ஐ.வி. பரவல் விகிதம் சரிந்து வருகிறதென்றும்,
Antiretroviral சிகிச்சை கிடைக்கும் வழிகள் அதிகரித்துவருகிறதென்றும் தெரிய வந்துள்ளது.