2011-06-03 15:37:14

உரோம் நகரில் மக்கள் திருப்பயணங்கள் குறித்த ஒரு புது வகை விழா


ஜூன் 03,2011. உலகின் வேறு எந்த நகரிலும் காண முடியாத ஒரு புது வகை விழா இவ்வியாழனன்று உரோம் நகரில் ஆரம்பமானது.
உலகில் மக்கள் திருப்பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய 31 இடங்களை விளம்பரப்படுத்தும் இந்த விழா, இவ்வியாழன் முதல் வருகிற ஞாயிறு வரை உரோமையில் நடைபெறும்.
ஆன்மாவின் பயணங்கள் விழா என்று பொருள்படும் The Journeys of the Spirit விழாவில் கலந்து கொள்ள, திருப்பயணங்களை நடத்தும் 120க்கும் அதிகமான நிறுவனங்கள் 31 நாடுகளிலிருந்து உரோம் நகர் வந்துள்ளன.
ஞாயிறு வரை நடைபெறும் இந்த விழா நாட்களில், உரோம் நகருக்கு ஏறத்தாழ 10 இலட்சம் மக்கள் வரக்கூடும் என்று இந்த விழாவினை ஏற்பாடு செய்துள்ளவர்கள் கூறியுள்ளனர்.
திருப்பயணங்களில் பொதிந்துள்ள அழகை மக்கள் உணர்வதற்கு 'திருப்பயணியின் வாழ்வுமுறை' என்ற கருத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்று விழாக்குழுவின் செய்தித் தொடர்பாளர் Rosemaria Mancini கூறினார்.
உரோம் நகரில் இத்தகைய விழா இது மூன்றாம் முறையாக நடைபெறுகிறதென்றும், இது வெற்றிகரமாக அமைந்தால், ஒவ்வோர் ஆண்டும் இது போன்ற விழாவை ஏற்பாடு செய்யும் திட்டங்கள் உள்ளதென்றும் அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.