செல்போன்களால் புற்றுநோய் அபாயம்: உலக நலவாழ்வு மையம் எச்சரிக்கை
ஜூன் 01,2011. இன்று உலகில் செல்போன் மிக அதிக அளவு ஊடுருவி இருக்கும் சூழ்நிலையில்,
செல்போன்கள் பயன்பாட்டால் புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக நலவாழ்வு
மையம் அண்மையில் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக நலவாழ்வு மையத்தின் ஓர் அங்கமான சர்வதேச
புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது..
செல்போன் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்தக் குழுவில் 14 நாடுகளைச் சேர்ந்த 31
விஞ்ஞானிகள் இடம் பெற்றிருந்தனர். புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் கொண்டிருப்பதால், செல்போன்களை
அபாயகரமான பூச்சிக்கொல்லி, சலவைக் காரங்கள் ஆகிய இரசாயனப் பொருட்களுக்கு நிகராகப் பட்டியலிட
வேண்டும் என்றும் அந்த ஆராய்ச்சிக் குழு பரிந்துரைத்துள்ளது. செல்போன்களில் இருந்து
வெளியேறும் கதிர்வீச்சு தான் புற்றுநோயை ஏற்படுத்துகின்றது என்பது அறிவியலாளர்களின் கருத்து.
பிறநாடுகளில் மொபைல் போன் வாங்குபவர்கள், அந்தப் போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு
அளவு ஆகியனவற்றை அறிந்து கொண்ட பின்னரே செல்போனை வாங்குகின்றனர் என்றும், ஆனால் இந்தியா
போன்ற மற்ற ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை என்றும் பரவலாகக்
கூறப்படுகிறது.