கடந்த பத்து ஆண்டுகளில் 251 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் - செய்தியாளர்கள் பாதுகாப்புக்
குழுவின் அறிக்கை
ஜூன் 01,2011. கடந்த பத்து ஆண்டுகளில் 13 நாடுகளில் 251 செய்தியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும்,
இக்கொலைகளைச் செய்தவர்கள் எந்த ஒரு தண்டனையும் இதுவரை பெறவில்லை என்றும் செய்தியாளர்கள்
பாதுகாப்புக் குழு ஒன்று அறிக்கை விடுத்துள்ளது. கொலை செய்தவர்கள் தண்டனை பெறாமல்
போவதால், இந்நாடுகளில் பத்திரிகைத் துறை இன்னும் அதிகமாக மௌனமாகிப் போகின்றதென்று கூறும்
இவ்வறிக்கை, இது போன்ற மறைமுகமான அடக்கு முறையை ஈராக், சோமாலியா, பிலிப்பின்ஸ் மற்றும்
இலங்கை ஆகிய நாடுகளில் அதிகம் காண முடிகிறதென்று சுட்டிக் காட்டுகிறது. பொதுமக்கள்
தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பத்திரிகைத்
துறையினர் கொலை செய்யப்படுவதால், இந்த உண்மைகள் மேலும் மேலும் புதைக்கப்படுகின்றன என்று
செய்தியாளர்கள் பாதுகாப்புக் குழுவின் இயக்குனர் Joel Simon இவ்வறிக்கையை வெளியிடும்போது
கூறினார். பாகிஸ்தான் இராணுவத்தில் அல்கேய்தாவைச் சேர்ந்தவர்கள் ஊடுருவியுள்ளனர் என்ற
செய்தியை வெளியிட்ட Saleem Shahzad என்பவரின் இறந்த உடல் இச்செவ்வாயன்று கண்டுபிடிக்கப்பட்டதைத்
தொடர்ந்து, இப்புதனன்று நியூ யார்க்கிலிருந்து வெளியான இவ்வறிக்கை, செய்தியாளர்களுக்கு
தகுந்த பாதுகாப்பும், நீதியும் கிடைக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது.