2011-06-01 16:08:40

அன்னை மரியை நோக்கிய திருத்தந்தையின் செபம்


ஜூன் 01,2011. அகில உலகத் திருச்சபைக்கு அருள் பெரும் கொடையாக இருந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் அருளாளர் பட்டமளிப்புடன் இந்த மரியன்னை மாதமான மே மாதத்தை துவக்கியது முக்கியத்துவம் நிறைந்த ஒன்றாக இருந்தது என மரியன்னை மாதத்தின் இறுதி நாள் வழிபாட்டில் கலந்துகொண்டபோது உரையாற்றினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
அந்த மாபெரும் திருத்தந்தையின் சாட்சியம், இன்றைய நம் வாழ்வை ஒளிர்விப்பதாகவும், தூண்டுவதாகவும், விசுவாச உறுதிப்பாட்டை வழங்குவதாகவும் உள்ளது என்ற பாப்பிறை, நம் விசுவாச உறுதிப்பாடு குறித்து சிந்திப்பதற்கு, அன்னை மரி எலிசபெத்தைச் சந்தித்த நிகழ்வு நமக்கு வழிகாட்டுவதாக உள்ளது என்றார்.
இறைத்தூதரின் வார்த்தைகளை நம்பி மரியா தன்னை இறைவனுக்கு முற்றிலுமாக கையளித்ததால்தான் அவரைக் கண்டவுடன் எலிசபெத்தும் 'ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்' என்று வாழ்த்தினார் என்றார் பாப்பிறை.
ஒவ்வொரு கிறிஸ்தவரும் இறைவனின் அழைப்புக்கு 'ஆம்' என்ற பதிலை வழங்கும் வகையில் எளிய உள்ளத்துடன் வாழ்வதற்குத் தேவையான வரத்தை அன்னை மரி இறைவனிடம் இருந்துப் பெற்றுத்தர வேண்டும் என்ற மன்றாட்டுடன் தன் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.