அகதிகள் குறித்த ஆஸ்திரேலியக் கொள்கைக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் கண்டனம்
மே 30,2011. ஆஸ்திரேலியக் கரையை நோக்கி படகுகளில் வரும் அகதிகள் மற்றும் ஆஸ்திரேலியாவின்
பழங்குடியின மக்கள் ஆகியோர் குறித்த ஆஸ்திரேலியக் கொள்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
ஆணையர் குறை கூறியுள்ளார். அரசியல் தஞ்சம் கோரிவருகின்ற மக்களைக் கட்டாயமாக தடுத்து
வைப்பது என்ற ஆஸ்திரேலிய கொள்கையானது அந்த நாட்டின் மனித உரிமைகள் வரலாற்றின் மீது படிந்துள்ள
ஒரு கரு நிழல் என்றும், அந்த நாட்டின் பழங்குடியினர் குறித்த அரசுக் கொள்கையானது அந்த
மக்களுக்கு ஆழமான தாக்கத்தையும், வலியையும் கொடுத்திருக்கிறது என்றும் ஐக்கிய நாடுகள்
மனித உரிமைகள் ஆணையர் நவிபிள்ளை கூறினார். தஞ்சம் தேடி வருபவர்களைக் கட்டாயமாக தடுத்து
வைக்கும் ஆஸ்ரேலிய அரசின் கொள்கையானது, ஆஸ்ரேலியாவின் சர்வதேசக் கடப்பாடுகளை மீறும் ஒன்று
என்றும், அந்த நாட்டின் மனித உரிமை குறித்த பதிவுகளில் நீண்ட காலத்துக்கு அது ஒரு கரு
நிழலாக படிந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். பொருத்தமற்ற, மனிதாபிமானமற்ற இக்கொள்கைகள்
ஆஸ்ரேலியப் பழங்குடியின மக்களுக்கு ஆழமான வலியையும், வேதனையும் தந்துள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.