2011-05-27 15:28:34

பொது நிலையினர் அரசுடன் அதிகமாக ஒத்துழைக்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும் - திருத்தந்தை


மே 27,2011. பொது நிலையினர் அரசுடன் இன்னும் அதிகமாக ஒத்துழைக்கவும், பொது வாழ்வில் இன்னும் முழுமையாகப் பங்கேற்கவும் அவர்களை ஊக்குவிப்பதில் ஆயர்கள் பொது நிலையினரை உற்சாகப்படுத்த வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இத்தாலி நாடு உருவாக்கப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவு இவ்வாண்டு கொண்டாடப்படுவதையொட்டி, அந்நாட்டினை இறையன்னையின் பாதுகாப்பில் ஒப்படைக்கும் நோக்கத்தில், இவ்வியாழனன்று மாலை புனித மரியன்னை பசிலிக்காப் பேராலயத்தில் இத்தாலிய ஆயர்களுடன் இணைந்து, திருத்தந்தை செபமாலையை வேண்டியபோது, அவர்களுக்கு ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.
இத்தாலி நாட்டிற்கும், வத்திக்கானுக்கும் இடையே நிலவி வந்த பிரச்சனைகள் நிறைந்த வரலாற்றைக் குறித்துப் பேசியத் திருத்தந்தை, இத்தாலியின் அரசியல் விவகாரங்களில் திருச்சபை ஈடுபடுவது அதன் பணியல்ல என்பதையும் எடுத்துக் கூறினார்.
இவ்வுலகையும் தாண்டிய மறுஉலகம் உள்ளதென்றும், அவ்வுலகைச் சார்ந்த உண்மைகளை உலகின் அரசுகளுக்குச் சொல்லித் தருவதற்கு திருச்சபை கடமைப் பட்டுள்ளதென்றும் திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.