2011-05-25 16:25:46

வரலாறு படைத்த இரண்டாம் ஜான் பால் - இத்தாலியில் புகைப்படக் கண்காட்சி


மே 25,2011. மேமாதம் முதல் நாளன்று திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலை அருளாளராக உயர்த்திய நிகழ்வின் வழியாக அவர்மேல் இவ்வுலகம் இன்னும் எவ்வளவு அன்பு கொண்டுள்ளது என்பதை உணர முடிந்ததென்று கர்தினால் Leonardo Sandri கூறினார்.
அருளாளர் ஜான் பால் குறித்த ஒரு புகைப்படக் கண்காட்சியை இத்தாலியில் உள்ள Spoleto பேராலயத்தில் துவக்கி வைத்த கர்தினால் Sandri, தொலைதூர நாட்டிலிருந்து உரோமைக்கு வந்த அருளாளர் ஜான் பால், இந்த உலகை ஒரு குடும்பமாக இணைக்கும் முயற்சியில் பெரிதும் ஈடுபட்டார் என்று கூறினார்.
இவ்வுலக வரலாற்றில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த அருளாளர் ஜான் பாலை இவ்வுலகம் எளிதில் மறந்து விடாது என்று கர்தினால் Sandri சுட்டிக்காட்டினார்.
‘வரலாறு படைத்த இரண்டாம் ஜான் பால்’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புகைப்படக் கண்காட்சி ஆகஸ்ட் மாதம் 30 வரை நடைபெறும் என்றும், இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள புகைப் படங்கள் Reuters நிறுவனத்தைச் சேர்ந்தவர்களால் எடுக்கப்பட்டவை என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.