கம்போடியத் திருச்சபை குறித்து அந்நாட்டு திருச்சபைப் பணியாளர்களின் முதல் கூட்டம்
மே 24, 2011. கம்போடியத் திருச்சபையைக் கட்டியெழுப்புவது குறித்து அந்நாட்டின் திருச்சபைப்
பணியாளர்கள் முதன் முறையாக அந்நாட்டில் கூடி விவாதித்தனர். பொதுநிலைப் பணியாளர்கள்
மற்றும் துறவுச் சபைகளின் அங்கத்தினர்கள் என 118 பேர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் உரையாற்றிய
ஆயர் Olivier Michel Mareie Schmitthaeusler, அந்நாட்டில் பணிபுரியும் மறைபோதகர்களுள்
பெரும்பான்மையினோர் வெளிநாட்டவர்களாக இருக்கும் பட்சத்தில், அந்நாட்டிற்கானப் பணியில்
அனைவரையும் சகோதர சகோதரிகளாக அன்பு செய்ய வேண்டியது அத்தியாவசியமான ஒன்றாகிறது என்றார். கல்வி
மற்றும் நலம் தொடர்புடையவைகளில் பல்வேறு திட்டங்களைக் கொண்டு செயல்படும் தலத்திருச்சபை,
அவ்வப்போது இவ்வாறு கூடி தங்கள் பணிகள் குறித்து ஏனைய மறைப்பணியாளர்களுடன் விவாதிப்பது
ஊக்கம் தருவதாக இருக்கும் என இக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் அறிவித்தனர். இத்தகையக்
கூட்டங்கள் இனிமேல் ஆண்டிற்கு மும்முறை இடம்பெறும் என உறுதி வழங்கியுள்ளார் ஆயர் Schmitthaeusler. 1960ம்
ஆண்டுகளில் வியட்நாம் போரின்போது அமெரிக்க ஐக்கிய நாட்டின் குண்டுவீச்சு தாக்குதலில்
கம்போடியாவின் அனைத்து கோவில்களும் அழிவுக்குள்ளாகியதைத் தொடர்ந்து, 1991ம் ஆண்டில் கம்பாடியா
நாட்டிற்கு வந்த வெளிநாட்டு மறைப்பணியாளர்களாலேயே தலத்திருச்சபை கட்டி எழுப்பப்பட்டு
வருகின்றது. கம்போடியாவில் தற்போது பணிபுரியும் ஏறத்தாழ 50 குருக்களுள் 5 பேரே அந்நாட்டைச்
சேர்ந்தவர்கள்.