மே 21, 2011. இம்மாதம் 24ந்தேதி சீனாவிற்கான உலக செபநாளை நினைவுறுத்தி நம் செபங்களுக்கு
அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, திருச்சபைக்கான நம் உண்மையான பங்களிப்பை செபத்தின்
மூலம் ஆற்றமுடியும் என்பதைக் கூறியுள்ளார் என்றார் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை குரு
ஃபெதரிக்கோ லொம்பார்தி. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தான் சீனாவிற்குச் சென்றபோது,
அங்குள்ள ஒரு வீட்டில் இடம்பெற்ற திருப்பலிக்குப்பின் அதில் பங்குபெற்ற வயதான குரு ஒருவர்,
திருத்தந்தையைக் குறித்து ஆர்வமாக விசாரித்ததை நினைவுகூர்ந்த திருப்பீடப்பேச்சாளர், திருத்தந்தை
மீதான அன்பிலும் ஆன்மீக ஐக்கியத்திலும் சீனத்திருச்சபை வளர்ந்து வருவதை உணர முடிகிறது
என்றார். சீனத்திருச்சபை துன்பங்களை அனுபவித்து வரும் இவ்வேளையில், அத்தலத் திருச்சபைக்காக
செபிக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை திருத்தந்தை சுட்டிக்காட்டி வருவது நம்
செபங்களுக்கான முக்கிய அழைப்பு என மேலும் கூறினார் இயேசு சபை குரு லொம்பார்தி.