உரோம் தூய இதய மருத்துவப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு திருத்தந்தையின் உரை.
மே 21, 2011. உண்மை மற்றும் இறைவன் குறித்த கேள்விகள், ஒவ்வொரு நாளின் உண்மை நிலைகளிலிருந்து
விலகி நிற்பவைகள் அல்ல, மாறாக உலகம் மற்றும் வாழ்வு குறித்து புரிந்து கொள்வதற்கான வழிகள்
என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். உரோம் நகரின் ‘ஜெமல்லி’ தூய இதய கத்தோலிக்க
மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 90ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அதன் பேராசிரியர்கள் மற்றும்
மாணவர்களைத் திருப்பீடத்தில் இச்சனிக்கிழமை சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை. 'கலாச்சார,
மனிதாபிமான மற்றும் ஒழுக்க ரீதி மதிப்பீடுகளைத் தேடும் மனிதன் நற்செய்தியின் வழி உலகைப்புரிந்து
கொள்ள முடியும் என்ற பாப்பிறை, பல அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதன் சக்தி உடையவனாக மாற
உதவும் அதேவேளை, அவனை அடிமையாக்கவும் வழி திறந்துள்ளன என்றார். அன்பில் உண்மைக்கு பணிபுரிய
வெண்டிய மனிதன், எல்லாச் சூழல்களிலும், குறிப்பாக தங்களையே பாதுகாக்க முடியாத சூழல்களிலும்,
பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் திருத்தந்தை. மனித மாண்பு என்பது
கிறிஸ்துவ விசுவாசத்தின் ஒளியிலேயே முழுமையாக உணர்ந்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதை
கலாச்சாரத்தின் வரலாறு காட்டுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை.