குருக்களின் தவறான பாலியல் நடவடிக்கைகளைக் கையாளும் முறை குறித்த விதிகள், ஏற்கனவே பல
ஆயர் பேரவைகளில் உள்ளன.
மே 17, 2011. உலகிலுள்ள பல்வேறு நாடுகளின் ஆயர் பேரவைகள், குருக்களின் தவறான பாலியல்
நடவடிக்கைகளைக் கையாளும் முறை குறித்த விதிகள் அடங்கிய ஏட்டைத் தயாரிக்கவேண்டும் என திருப்பீடம்
அழைப்பு விடுத்துள்ள போதிலும், ஏற்கனவே பல நாடுகளில் விதிமுறைகள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு
வருவதாக அறிவித்தார் திருப்பீடப்பேச்சாளர். குருக்களின் தவறானப் பாலியல் நடவடிக்கைகளைக்
கையாள்வதற்கு உதவும் வகையிலான வழிகாட்டு விதிகளை திருப்பீடம் உலகின் ஆயர் பேரவைகளுக்கு
அனுப்பியுள்ளது பற்றிக் குறிப்பிட்ட இயேசுசபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி, ஆங்கிலம் பேசும்
நாடுகளுள் பல ஏற்கனவே இத்தகைய விதிகள் அடங்கிய ஏட்டை தயாரித்துள்ளதாகவும், அவைகளுள் அமெரிக்க
ஐக்கிய நாடு, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, மால்டா, ஆஸ்திரேலியா,
கானடா ஆகியவை முக்கியமானவை எனவும் தெரிவித்தார். பிலிப்பீன்ஸ், பிரசில், சிலே,ஜெர்மனி,
ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் ஏற்கனவே இது குறித்த
விதிகளைத் தயாரித்துள்ளதாகவும், இந்தியா, வெனிசுவேலா, ஹாலந்து, ஸ்வீடன், பெல்ஜியம், இத்தாலி
ஆகியவைகளில் இதற்கான தயாரிப்புகள் ஏற்கனவே துவங்கியுள்ளதாகவும் மேலும் கூறினார் குரு
லொம்பார்தி.