ஐ.நா.விற்கான திருப்பீட பிரதிநிதி அலுவலகத்தின் இளைஞர் கூட்ட ஏற்பாடு
மே 17, 2011. ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கான திருப்பீட நிரந்தரப்பார்வையாளர் அவை மற்றும்
சில கத்தோலிக்க அமைப்புகள் இணைந்து வரும் ஜூன் மாதம் மூன்றாம் தேதி இளையோர் குறித்த உயர்மட்டக்
கூட்டம் ஒன்றை ஐநாவில் நடத்த உள்ளன. இளையோர் குறித்தும் உலக இளையோர் தினம் குறித்தும்
விவாதிக்க உள்ள இக்கூட்டத்தின்போது இளையோருக்கான ஃபெர்னாண்டோ ரியேலோ விருது வழங்கப்படும்
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய இளையோர் சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்னைகள் மற்றும்
மனித வாழ்வைப் பாதுகாத்து முன்னேற்றுவதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து கருத்துக்களைப்
பரிமாற இக்கருத்தரங்கு நல்லதொரு வாய்ப்பை இளையோருக்கு வழங்கும் என இக்கூட்டத்திற்கு
ஏற்பாடு செய்துள்ளோர் அறிவித்துள்ளனர். மரணக் கலாச்சாரத்தை வாழ்வுக் கலாச்சாரமாக மாற்றுவதற்கான
உண்மை, நம்பிக்கை ஆகியவைகளின் வழிகாட்டிகளாக கருத்துக்களை முன் வைக்கும் இளையோருக்கு
ஃபெர்னாண்டோ ரியேலோ அமைப்பின் விருதாக, மத்ரித் உலக இளையோர் தினத்திற்கான பயணம் ஏற்பாடுச்
செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.