லிபியா மற்றும் சிரியாவில் அமைதி ஏற்பட திருத்தந்தை அழைப்பு
மே 16, 2011. அண்மைப் போராட்டங்களாலும் மோதல்களாலும் பாதிக்கப்பட்டிருக்கும் லிபியா
மற்றும் சிரியாவில் உடனடி அமைதித் தீர்வுகள் காணப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட். பொதுமக்களிடையே பல்வேறு உயிரிழப்புகளுக்கும் துன்பங்களுக்கும்
காரணமாகியுள்ள லிபிய மோதல்களை ஆழ்ந்த கவலையுடன் உற்று நோக்கி வரும் தான், வன்முறைகளின்
வழிகள் கைவிடப்படவும், சர்வதேச அமைப்புகளின் உதவியுடன் அமைதியின் பாதையைப் பின்பற்றவும்
மீண்டும் வலியுறுத்துவதாக இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டார் பாப்பிறை. சிரியாவில்
இடம்பெறும் போராட்டங்கள் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, அந்நாடு இதுவரை கொண்டிருந்த
ஐக்கியம் மற்றும் இணக்க வாழ்வு மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என மேலும் கேட்டுக்கொண்டார்.