திருத்தந்தை 23ம் ஜானின் சமூகக்கோட்பாடுகள் இன்றும் நடைமுறைக்கு ஒத்தவை
மே 16, 2011. திருத்தந்தை 23ம் ஜான் வெளியிட்ட'Mater et Magistra' என்ற ஏட்டின் 50ம்
ஆண்டு நிறைவையொட்டி உரோம் நகரில் இடம் பெற்ற உலகக் கருத்தரங்கில் கலந்துகொண்டோரை இத்திங்களன்று
திருப்பீடத்தில் சந்தித்து தன் வாழ்த்துக்களை வெளியிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். மனிதகுலத்திற்கான
திருச்சபையின் பணிகளைக் கவனத்தில் கொண்டு சமூகக் கோட்பாடுகள் குறித்து திருத்தந்தை 23ம்
ஜான் எண்ணியதைச் சுட்டிக்காட்டிய பாப்பிறை 16ம் பெனடிக்ட், சமூக மற்றும் கலாச்சார சரிநிகரற்ற
நிலைகளை மேற்கொள்ள அத்திருத்தந்தை தன் ஏட்டில் சுட்டிக்காட்டியுள்ள உண்மை, அன்பு, நீதி
ஆகியவைகளுடன் கூடிய வழிமுறைகள், இன்றும் உலக மயமாக்கலின் சரிநிகரற்ற நிலைகளை எதிர்கொள்ள
இயைந்ததாக உள்ளன என்றார். புதிய ஆதாமாம் இயேசு கிறிஸ்துவுடன் தனிப்பட்ட ஐக்கியத்தைக்
கொள்வதன் மூலமே பகுத்தறிவானது குணம்பெற்று பலப்படுத்தப்படுகிறது, அதன் வழியே தான் நாம்
இப்புதிய சூழல்களுக்கேற்ற வகையில் முன்னேற்றத்தையும் பொருளாதாரத்தையும் அரசியலையும் பெறமுடியும்
என மேலும் கூறினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.