நிலநடுக்கம், சுனாமி இவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் ஜப்பான்
காரித்தாஸ் அமைப்பு தொடர்ந்து வரும் பணிகள்
மே 13,2011. மார்ச் 11ம் தேதி ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்,
சுனாமி இவைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் மீட்புப் பணியைத் தொடர்வதற்கு ஜப்பான்
காரித்தாஸ் அமைப்பு ஜப்பானிலிருந்தும் இன்னும் பிற நாடுகளிலிருந்தும் வந்திருக்கும் இளையோரை
நம்பியுள்ளது. Kamaishi என்ற இடத்தில் உள்ள கோவிலில் தங்கி, சுற்றுப் புறத்தில் பணிகளை
மேற்கொண்டுள்ள இளையோர், இன்னும் அப்பகுதியைச் சுத்தம் செய்வதிலேயே பெரும்பாலும் ஈடுபட்டுள்ளனர்
என்று UCAN செய்தி கூறுகிறது. பணி நேரங்கள் போக, மீதி நேரங்களில் இவ்விளையோர் தங்கள்
அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது ஒருவரை ஒருவர் இன்னும் அதிகம் புரிந்து கொள்வதற்கும்,
அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனுபவங்களை வளர்த்துக் கொள்வதற்கும் உதவுகின்றன என்று
இவ்விளையோர் UCANக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளனர்.காரித்தாஸ் போன்ற பிறரன்பு
அமைப்பில் பாதுகாப்பான உணர்வுடன் பணிகளை மேற்கொள்ள முடிகிறதென்றும், பிறருக்கு உதவிகள்
செய்வதில் உள்ள மகிழ்வை உணர முடிகிறதென்றும் காரித்தாஸ் தன்னார்வத் தொண்டர்கள் கூறினர்.