இந்தோனேசிய ஆயர்கள் : ASEAN உச்சி மாநாடு, கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
மே07,2011. இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ASEAN நாடுகளின் தலைவர்கள் இச்சனிக்கிழமை தொடங்கியுள்ள
18வது உச்சி மாநாடு, அப்பகுதியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது குறித்து
கலந்தாலோசிக்கும் என்ற தங்கள் நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர் இந்தோனேசிய ஆயர்கள். பத்து
நாடுகளின் கூட்டமைப்பான ASEAN அமைப்பின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இம்மாநாடானது வெறும்
கூட்டமாக மட்டும் அமைந்து விடாமல், அந்நாடுகளில் மக்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கு
நடவடிக்கைகள் எடுப்பதாக அமைய வேண்டும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக இந்தோனேசிய ஆயர்
பேரவையின் அருள்திரு Antonius Benny Susetyo கூறினார். ASEAN நாடுகளின் மக்களின் முன்னேற்றத்திற்கு
கல்வி மிகவும் இன்றியமையாதது என்று இந்தோனேசிய கத்தோலிக்க அறிவாளர் கழகத் தலைவர் Mulyawan
Margadana கூறினார். "நாடுகளின் உலகளாவிய குழுமத்தில் ASEAN குழுமம்" என்ற தலைப்பில்
இம்மாநாடு தொடங்கியுள்ளது.