புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் இரவீந்தரநாத் தாகூர் 1861ம் ஆண்டு மே 7ம்தேதி கல்கத்தாவில்
ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார். நாடகாசிரியர், மெய்யியலாளர், இசையமைப்பாளர், ஓவியர்
என பல முகங்கள் கொண்ட இவர், கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக 1913-ல் இலக்கியத்துக்கான
நொபெல் பரிசு பெற்றார். ஆசியக் கண்டத்தில் நொபெல் பரிசு பெற்ற முதல் மனிதர் இவரே. இந்தியாவின்
நாட்டுப் பண்ணான ‘ஜன கண மன’ பாடலை இயற்றியவர். இவருடைய மற்றொரு பாடல் ‘அமர் சோனார் பங்களா’
பங்காளதேஷின் நாட்டுப் பண்ணாக பிரபலம் அடைந்தது. இவர் தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை
எழுதத் தொடங்கினார். பதினாறாவது வயதில் இவரது முதலாவது குறிப்பிடத்தக்க கவிதையை ‘பானுசிங்கோ’
என்னும் புனை பெயரில் வெளியிட்டார். 1877ம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும்
வெளிவந்தன. தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். 1921
ஆம் ஆண்டு சாந்தினிகேதனுக்கு அருகில் உள்ள சுருல் என்ற கிராமத்தில் ‘அமைதியின் உறைவிடம்’
என்ற பெயரில் ‘ஸ்ரீநிகேதன்’ என்ற நிறுவனத்தை ஆம்பித்தார். இவர் நிறுவிய விசுவபாரதி
கல்லூரி 1951ல் பல்கலைக்கழகமானது. அண்ணல் காந்தி, எழுத்தாளர் H.G. Wells, அறிவியலாளர்
ஐன்ஸ்டீன், பெனிட்டோ முசோலினி ஆகியோரை நேரடியாகச் சந்தித்து உரையாடியுள்ளார். தன்
60வது வயதில் ஓவியங்களை வரையவும், வண்ணங்களைத் தீட்டவும் ஆரம்பித்தார். 2000த்திற்கும்
மேலாகப் பாடல்கள் எழுதி சில பாடல்களுக்கு அவர் இசையும் அமைத்துள்ளார். 1915ம் ஆண்டில்,
பிரித்தானிய அரசு, தாகூருக்கு ‘சர்’ பட்டம் வழங்கி அவரை கௌரவித்தது. 1878ம் ஆண்டு
மற்றும் 1932ம் ஆண்டுகளுக்கு இடையில் தாகூர் ஐந்து கண்டங்களில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட
நாடுகளுக்குச் சென்றுள்ளார். நீண்ட காலம் நோய்வாய்பட்டிருந்த தாகூர், 1941 ஆம் ஆண்டு
ஆக்ஸ்ட் 7 ஆம் தேதி உயிர் நீத்தார்.