அருளாளர் இரண்டாம் ஜான்பால் பெயரால் பிலிப்பின்ஸில் பங்குத்தளம் அமைக்கும் முயற்சி
மே 04,2011. அருளாளர் இரண்டாம் ஜான்பால் 1981ம் ஆண்டு பிலிப்பின்ஸ் சென்றபோது திருப்பலி
நிகழ்த்திய இடம் ஒரு நினைவுத் தலமாக இத்திங்களன்று துவக்கப்பட்டது. இதை விரைவில் ஒரு
பங்குத்தளமாக மாற்றி அருளாளர் இரண்டாம் ஜான்பால் பெயரைச் சூட்டும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த
முயற்சிகளை வரவேற்றுப் பேசிய Balanga ஆயர் Ruperto Santos, அருளாளர் இரண்டாம் ஜான்பால்
திருப்பலி நிகழ்த்திய இடம் தற்போது அரசின் வசம் இருக்கின்றதென்றும், இந்த நிலம் தலத்திருச்சபைக்குக்
கொடையாகக் கொடுக்கப்பட்டால், அருளாளரின் பெயரால் பங்குத்தளம் ஆரம்பிக்க முடியும் என்றும்
கூறினார். தலத் திருச்சபையின் இப்புனித முயற்சிகளுக்கு அரசு தடையாக இருக்காதென்று
தான் நம்புவதாக அப்பகுதியின் மேற்பார்வையாளராகப் பணி புரியும் முன்னாள் கடற்படைத் தளபதி
Amado Sanglay கூறினார். அருளாளர் ஜான்பால் 1981ல் திருப்பலி நிகழ்த்திய அந்த இடம்,
'படகு மக்கள்' (Boat people) என்று வழங்கப்படும் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான வியட்நாம்,
கம்போடிய அகதிகளுக்கு பல ஆண்டுகள் தற்காலிகக் குடியிருப்பாகச் செயல்பட்டுள்ளதென்பதும்,
அவ்விடத்தில் இரண்டாம் ஜான்பால் அகதிகளுடன் திருப்பலி நிகழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்
தக்கது.