2011-05-04 15:47:55

21வது நூற்றாண்டின் இறுதியில் மக்கள்தொகை ஆயிரம் கோடியைத் தாண்டும் - ஐ.நா.அறிக்கை


மே 04,2011. உலக மக்கள்தொகை 2050ம் ஆண்டு 900 கோடியைத் தாண்டும் என்றும் 21வது நூற்றாண்டின் இறுதியில் ஆயிரம் கோடியைத் தாண்டும் என்றும் இச்செவ்வாய் வெளியிடப்பட்ட ஐ.நா.அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஆப்ரிக்காவின் சகாராப் பகுதி நாடுகள், ஆசியா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளே மக்கள் தொகை அதிகமாவதற்குக் காரணமாக இருக்கும் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
தற்போது 700 கோடியை நெருங்கி வரும் உலக மக்கள்தொகை, இதே அளவில் உயர்ந்து வந்தால், 2023ம் ஆண்டு 800 கோடியையும், 2041ல் 900 கோடியையும் தாண்டும் என்றும், 2081ம் ஆண்டு 1000 கோடியைத் தாண்டும் மக்கள் தொகை, இந்நூற்றாண்டின் இறுதியில் 1010 கோடியை நெருங்கும் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகும் அதே வேளையில், வாழ்வோரின் சராசரி வயது கூடி வருவதும் மக்கள் தொகை உயர்வதற்குக் காரணம் என்று ஐ.நா. மக்கள்தொகைப் பிரிவின் இயக்குனர் Hania Zlotnik கூறினார்.
இவ்வாண்டின் இறுதிக்குள் உலக மக்கள்தொகை 700 கோடியைத் தாண்டும் என்றும், மக்களின் வாழும் காலம் இப்போதுள்ள சராசரி நிலையான 68 வயதிலிருந்து, இந்நூற்றாண்டின் இறுதிக்குள் 81ஆக உயரும் என்றும் ஐ.நா. வெளியிட்ட இவ்வறிக்கை கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.