மே மாதம் முதல் நாள் என்றதும் நினைவில் தோன்றுவது மே தினம் என்று வழங்கப்படும் அகில உலகத்
தொழிலாளர் நாள். 18ம் நூற்றாண்டின் இறுதியில் தொழில் புரட்சி தோன்றியது; பல இயந்திரங்கள்
கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் மனிதர்கள் செய்யும் தொழில் குறையும் என்ற எதிர்பார்ப்பு
எழுந்தது. ஆனால், தொழிலதிபர்களின் பேராசையால் மனிதர்களும் இயந்திரங்களாய் மாற வேண்டிய
கட்டாயம் உருவானது. தொழிலாளிகள் ஒவ்வொரு நாளும் 15 அல்லது 16 மணி நேரம் உழைக்க வேண்டியதாயிற்று. தொழிலதிபர்களின்
பேராசையை ஒழிக்கவும், தொழிலாளர்களின் மதிப்பை நிலைநிறுத்தவும் போராட்டங்கள் எழுந்தன.
ஒவ்வொரு தொழிலாளியும் நாளொன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை
வலியுறுத்தி, பல நாடுகளில் எழுந்த போராட்டங்கள், அவற்றில் கிடைத்த வெற்றி, தோல்வி, உயிர்
தியாகம் ஆகிய அனைத்தையும் கொண்டாட மே தினம் உருவானது. 1955ம் ஆண்டு திருத்தந்தை பன்னிரெண்டாம்
பத்திநாதர் மே மாதம் முதல் நாளை தொழிலாளர்களின் பாதுகாவலராகிய புனித யோசேப்பின் திருநாளாக
அறிவித்தார்.உழைப்பாளிகளின் சக்தியைச் சாறாய்ப் பிழிந்து, அதைக் கொண்டு தொழிலதிபர்களின்
பேராசைத் தீயை வளர்த்து வரும் போக்கு இன்று உலகில் அதிகம் வளர்ந்துள்ளது. இந்தப் போக்கு
தொடரும் வரை அகில உலக தொழிலாளர் நாளுக்கு அதிக அர்த்தம் இருக்காது.