சிரியாவில் இடம் பெற்று வரும் அரசு எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து மெல்கித்தே ரீதி
கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் கவலை
ஏப்ரல்30,2011. சிரியாவில் நடைபெற்று வரும் அரசு எதிர்ப்புப் போராட்டங்கள் மத்திய கிழக்குப்
பகுதியிலும், குறிப்பாக அந்நாட்டிலும் கிறிஸ்தவர்களின் வெளியேற்றத்தை அதிகரிக்கக் கூடும்
என்று உலகளாவிய மெல்கித்தே ரீதி கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் கவலை தெரிவித்தார். இவ்வாறு
ஆசிய செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த அந்தியோக்கின் முதுபெரும் தலைவர் மூன்றாம் கிரகரி
லாஹம், முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு, தற்போதைய சிரிய அரசுக்கு எதிரானக் கடும் போராட்டங்களில்
முக்கிய இடத்தை வகித்து வருகின்றது என்றார். சிரியாவில் அதிக சுதந்திரம் கேட்டுப்
போராடி வரும் மக்களோடு தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்த அவர், சில இசுலாம் தீவிரவாதிகள்
இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்தி நாட்டைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் என்றும் கூறினார். தற்போதைய
அரசு கவிழ்க்கப்பட்டு இசுலாம் தீவிரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றும் சூழல் ஏற்படும் பட்சத்தில்
தங்களது எதிர்காலம் குறித்து கிறிஸ்தவர்கள் கவலை கொண்டுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்