இலங்கை உள்நாட்டுப் போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா.வின் அறிக்கை பற்றி கிறிஸ்தவத்
தலைவர்கள் கருத்து
ஏப்ரல் 27,2011. இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடைபெற்ற பல்வேறு அத்துமீறலானச் செயல்கள்
மற்றும் குற்றங்கள் குறித்த ஐ.நா.வின் அறிக்கை வருங்கால நடவடிக்கைகளுக்கு ஒரு அடித்தளமாக
கருத்தப்பட வேண்டும் என்று இலங்கையின் கிறிஸ்தவத் தலைவர்கள் அறிக்கையொன்று வெளியிட்டுள்ளனர். இத்திங்கள்
மாலையில் நியூயார்க்கில் வெளியான இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும்
மனதிற் கொண்டு இலங்கை வாழ் அனைவரும், முக்கியமாக, இலங்கையில் உள்ள மதத் தலைவர்கள் மற்றும்
அரசுத் துறைகள் செயல்பட வேண்டும் என்று கிறிஸ்தவத் தலைவர்களின் இவ்வறிக்கை வலியுறுத்தியுள்ளது. ஐ.நா.
சமர்ப்பித்துள்ள இந்த அறிக்கையில் இலங்கை அரசு பொது மக்கள் மீது நடத்திய பல்வேறு தாக்குதல்கள்,
மற்றும் அரசுக்கு எதிராகப் போராடியவர்கள் மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்திய குற்றம்
ஆகியவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.போர் குற்றங்கள் குறித்த பல்வேறு புகார்களைத் தீர ஆராய்வதற்கு
தனிப்பட்ட ஒரு குழு நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா.வின் இவ்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.