2011-04-27 16:40:18

இரண்டாம் ஜான்பால் அருளாளராக உயர்த்தப்படும் திருச்சடங்குத் திருப்பலியில் புனிதப் பொருளாக அவரது இரத்தம்


ஏப்ரல் 27,2011. வருகிற மே மாதம் முதல் தேதியன்று, 50க்கும் மேற்பட்ட உலகத்தலைவர்களும் பிற சமயத் தலைவர்களும் கலந்து கொள்ளவிருக்கும் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அருளாளராக உயர்த்தப்படும் திருச்சடங்குத் திருப்பலியில் அவரது இரத்தம் அடங்கிய ஒரு சிறு பேழை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இடம் அளிக்கப்படும்.
இப்பேழை புனிதப் பொருளாக இத்திருப்பலி நேரத்தில் பீடத்தில் வைக்கப்படும். திருப்பலிக்குப் பின், திருத்தந்தையின் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்கான அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஒரு கோவிலில் இப்பேழை பாதுகாக்கப்படும்.
திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களின் இரத்தம் அடங்கிய நான்கு பேழைகள் உள்ளன. இவற்றில் ஒன்று வத்திக்கானிலும், மற்றொன்று வத்திக்கானுக்குச் சொந்தமான Bambino Gesu மருத்துவமனையை நடத்தி வரும் புனித வின்சென்ட் டி பால் பிறரன்பு மகளிர் சபை அருட்சகோதரிகள் கண்காணிப்பிலும் வைக்கப்படும்.மீதி இரு பேழைகள் போலந்து நாட்டில் உள்ள ஓர் ஆலயத்தில் புனிதப் பொருளாக பீடத்தில் பதிக்கப்படும் என்றும் தற்போது கட்டுமானத்தில் உள்ள இக்கோவில் மேமாதம் முதல் தேதிக்குப் பின் திறக்கப்படும் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.