பூட்டானில் சமய சுதந்திரத்திற்கான அடையாளம் தெரிகிறது - பேராயர் மெனாம்பரம்பில்
ஏப்ரல்20,2011. பூட்டான் நாடு, சனநாயகத்தில் அபார முன்னேற்றத்தையும் சமய சுதந்திரத்திற்கு
நல்ல திறந்த அடையாளங்களையும் காட்டி வருவதாக குவாகாட்டி பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில்
கூறினார். பூட்டானில், சமய சுதந்திரத்திற்கு உறுதி வழங்கப்பட்டால் பல துறவு சபைகள்
தங்களது சேவைகளை அந்நாட்டிற்கு வழங்கத் தயாராக இருக்கின்றன என்றும் பேராயர் Fides செய்தி
நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 1600ம் ஆண்டில் காப்ரல், கசெல்லா
ஆகிய இரண்டு போர்த்துக்கீசிய இயேசு சபை குருக்கள் பூட்டானுக்குச் சென்று கிறிஸ்து பற்றி
மக்களுக்கு எடுத்துக் கூறினர், அந்த விசுவாசம் மீண்டும் கட்டி எழுப்பப்படும் என்ற தனது
நம்பிக்கையையும் பேராயர் மெனாம்பரம்பில் தெரிவித்தார். பூட்டானில் சுமார் ஒரு இலட்சம்
கிறிஸ்தவர்கள் இருப்பதாக அண்மைப் புள்ளி விபரம் ஒன்று கூறுகிறது. சுமார் எட்டு இலட்சம்
மக்களைக் கொண்ட பூட்டானில் 60 விழுக்காட்டினர் பூட்டானிய இனத்தவர் மற்றும் 40 விழுக்காட்டினர்
நேபாள இனத்தவர்.