ஏப்ரல் 19, 2011. இத்தாலியின் தொரினோ நகர் முன்னாள் பேராயர் கர்தினால் ஜொவான்னி சல்தரினி
இறைபதம் அடைந்ததையொட்டி தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கற்தந்தியை அந்த உயர்
மறைமாவட்ட விசுவாசிகளுக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். கர்தினால்
சல்தரினியின் மறைவால் துயருறும் விசுவாசிகளுக்கும், உறவினர்களுக்கும் தன் ஆழ்ந்த அனுதாபங்களைத்
தெரிவிப்பதுடன், கர்தினாலின் ஆன்ம இளைப்பாற்றிக்கானச் செபத்திற்கும் உறுதி கூறும் திருத்தந்தையின்
செய்தி, கர்தினால் உடல் சுகவீனம் அடைந்திருந்த கடைசிக் காலத்தில் அவருக்கு அன்புடன் பணிபுரிந்த
அனைவரையும் நினைவு கூர்வதாகவும் தெரிவிக்கிறது. மிலான் உயர்மறைமாவட்டத்தின் காந்து
எனுமிடத்தில் 1924ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ந்தேதி பிறந்த கர்தினால் சல்தரினி, மிலான்
துணை ஆயராகவும், பின்னர் தொரினோ பேராயராகவும் 1999ம் ஆண்டு வரைப் பணியாற்றியுள்ளார்.
காலம் சென்ற கர்தினாலின் உடல் இப்புதனன்று பிற்பகல் தொரினோ பேராலயத்தில் அடக்கம் செய்யப்படும். கர்தினால்
சல்தரினியின் மரணத்துடன், திருச்சபையில் கர்தினால்களின் எண்ணிக்கை 199ஆகக் குறைந்துள்ளது.
இதில் 115 பேரே 80 வயதிற்கு உட்பட்டவர்கள்.