ஏப்ரல் 16,2011 : மனித வாழ்வை புண்படுத்தும் குற்றங்களில் மிகவும் கடுமையான குற்றம் கருக்கலைப்பு
என்று கொரிய ஆயர்கள் எச்சரித்துள்ளனர். தென்கொரியத் தலைநகர் செயோலில் முதல் முறையாகக்
கடைபிடிக்கப்பட்ட வாழ்வுக்கான ஞாயிறையொட்டி திருப்பலி நிகழ்த்திய அந்நாட்டு ஆயர் பேரவையின்
உயிர் நன்னெறியியல் பணிக்குழுத் தலைவரான ஆயர் கபிரியேல் சாங் போங்-ஹன், கருக்கலைப்பு
செய்வது கொலை செய்வதாகும் என்பதை விசுவாசிகளுக்கு நினைவுபடுத்தினார். மக்கள் வாழ்வுக்
கலாச்சாரத்தைக் கட்டி எழுப்புமாறும் கேட்டுக் கொண்ட ஆயர் சாங், தென் கொரியாவில் ஒரு
நாளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கருக்கலைப்புகள் இடம் பெறுவதைக் கவலையோடு சுட்டிக் காட்டினார். கருக்கலைப்பு
செய்வது ஒரு தனிப்பட்ட நபரின் உரிமை என்றும் பெண்களின் நலவாழ்வுக்கான உரிமை என்றும் சிலர்
சொல்லி வருகின்றனர் என்றும் ஆயர் குறை கூறினார். மேலும், கொரியத் திருச்சபை வாழ்வின்
நற்செய்தியை அறிவித்து வருகின்றது என்றும் கல்வியறிவு மூலம் வாழ்வின் மேன்மையை மக்களுக்குப்
புகட்டத் திருச்சபை முயற்சிக்கின்றது என்றும் தலத்திருச்சபை அதிகாரிகள் கூறியுள்ளனர்.