சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் (செப்டம்பர் 5, 1888 - ஏப்ரல் 17, 1975) சுதந்திர இந்தியாவின்
முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். திருத்தணியில்
பிறந்த இராதாகிருஷ்ணன், தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில்
முதுகலைப்பட்டம் பெற்றார். இவரது அறிவுத் திறமையால் கல்லூரியில் எப்போதும் முதன்மை
நிலையில் இருந்தார். இவர் முதுகலைப் பட்டம் பெறுவதற்கு எழுதிய இறுதி கட்டுரை ஒரு நூலாக
வெளிவந்தது. அப்போது இவருக்கு வயது 20. இவர் ஆசிரியராக பணியாற்றியதால், இவர் பிறந்த தினமான
செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது. இலக்கியத்திற்கான நொபெல்
விருதுக்கு இவரது பெயர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் (1933 - 37) பரிந்துரைக்கப்பட்டாலும்,
இந்த விருதை இவர் பெற முடியவில்லை. இவர் பெற்ற பல உயர்ந்த விருதுகளில் தலை சிறந்தது 1954ம்
ஆண்டு இவர் பெற்ற 'பாரத இரத்னா' விருதே. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் 1975ம் ஆண்டு ஏப்ரல்
17ம் நாள் காலமானார்.