புனித வெள்ளியன்று மும்பையில் நடைபெறவுள்ள மௌன ஊர்வலத்தில் 20000 கிறிஸ்தவர்கள் பங்கு
பெறுவர்
ஏப்ரல் 15,2011. வருகிற புனித வெள்ளியன்று மும்பையில் நடைபெறவுள்ள மௌன ஊர்வலத்தில் 20000
கிறிஸ்தவர்கள் பங்கு பெறுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ பாரம்பரியத்தின்படி,
புனித வெள்ளியன்று மேற்கொள்ளப்படும் உண்ணா நோன்பு, மற்றும் செபங்களுடன் இந்த மௌன ஊர்வலமும்
மேற்கொள்ளப்படும் என்றும், ஆறு மைல் நீளமான இந்த ஊர்வலம் திரு இருதய ஆலயத்திலிருந்து
கிளம்பி, புனித சார்லஸ் மடத்தில் முடிவடையும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. இந்தியாவில்
கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு வன்முறைகளில் பலியான, மற்றும் பாதிக்கப்பட்ட
மக்களுக்கென மேற்கொள்ளப்படும் இந்த ஊர்வலத்தில் மும்பையில் உள்ள அனைத்து கத்தோலிக்க மற்றும்
கிறிஸ்தவ சபைகளும் பங்கேற்கும் என்று தெரிகிறது. கொடுமைகளுக்குள்ளாகி, இறுதியில் சிலுவையில்
அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவை நினைவுகூரும் புனித வெள்ளியன்று இந்தியாவிலும், இன்னும்
உலகின் பல நாடுகளிலும் இன்றைய காலக் கட்டத்தில் கிறிஸ்தவர்கள் என்பதால் துன்பங்களைத்
தாங்கி வரும் பல்லாயிரம் மக்களை இந்த மௌன ஊர்வலத்தில் நினைவுகூரவுள்ளோம் என்று ஊர்வலத்தின்
அமைப்பாளர்களில் ஒருவரான Joseph Dias கூறினார்.2011ம் ஆண்டு ஆரம்பமானதிலிருந்து, ஏறத்தாழ
ஒவ்வொரு நாளும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வருவதைக் காண முடிகிறதென்றும்
கிறிஸ்தவர்கள் எதிர் தாக்குதல்களில் ஈடுபாடாமல் இருப்பதால், அவர்கள் வன்முறைகளுக்கு எளிதில்
இலக்காகின்றனர் என்றும் Joseph Dias விளக்கினார்.