ஐரோப்பிய அவைக் கூட்டத்தில் மதங்களுக்கிடையேயான உரையாடலுக்கான திருப்பீட அவைத் தலைவரின்
உரை
ஏப்ரல் 14,2011. உயரிய வாழ்க்கை மதிப்பீடுகளைத் தலைமுறை, தலைமுறையாக எடுத்துச் செல்வது
கடினமாகி வரும் இன்றைய காலக்கட்டத்தில், கலாச்சாரத்தில் கிறிஸ்தவ விசுவாசம் தலையிட்டு,
பணிகள் புரிவது இன்றியமையாதத் தேவையாக உள்ளதென்று கூறினார் கர்தினால் Jean Louis Tauran. "கலாச்சாரங்களிடையே
இடம்பெறும் கலந்துரையாடலின் மதக்கூறுகள்" என்ற தலைப்பில் அண்மையில் இடம்பெற்ற ஐரோப்பிய
அவைக் கூட்டத்தில் மதங்களுக்கிடையேயான உரையாடலுக்கான திருப்பீட அவையின் தலைவரான கர்தினால்
Tauran ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார். கலாச்சாரத்தில் மதங்கள் மேற்கொள்ளும் தலையீடு
மனிதனைக் கட்டுப்படுத்துவதற்கு அல்ல, மாறாக, உலகின் வளங்கள் வருங்காலத் தலைமுறையினருக்கும்
கிட்டும் வகையில் நியாயமாகச் செயல்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்தி வழிகாட்டவே என்று
கர்தினால் Tauran கூறினார். மனிதக்கரு சோதனைகள், கருக்கலைப்பு, கருணைக் கொலை, தவறான
பாலின நடவடிக்கைகள், சர்வாதிகார போக்குகள் ஆகிய வன்முறை வழிகளுக்கு எதிராக, மனிதாபிமானம்
நிறைந்த, அயலாருக்கான அன்பை மையப்படுத்திய ஒரு கலாச்சாரத்தை நாம் கொண்டிருக்க வேண்டும்
என விண்ணப்பித்தார் கர்தினால் Tauran. மதச் சுதந்திரத்தை வளர்க்கவும், பாதுகாக்கவும்
ஐரோப்பிய சமுதாயத்திற்கு இருக்கும் கடமையைச் சுட்டிக் காட்டிய கர்தினால் Tauran, இறைவன்
பெயரால் இடம்பெறும் வன்முறைகள் எந்தச் சூழலிலும் நியாயப்படுத்த முடியாதவை என்பதையும்
எடுத்துரைத்தார்.