இலங்கையில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் - தலத்திருச்சபை
வேண்டுகோள்
ஏப்ரல்09,2011. இலங்கையில் இடம் பெற்ற நீண்டகாலப் போரில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகள்
அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று தலத்திருச்சபை மற்றும் சட்ட அமைப்பாளர்கள்
கேட்டுக் கொண்டுள்ளனர். உள்நாட்டுப் போர் முடிந்து ஈராண்டுகளும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த
மக்களை மீள்குடியமர்த்தி ஓராண்டும் ஆகியிருக்கும் இவ்வேளையில், நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படுவதில்
தாமதம் ஏற்படுவதால் முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் மக்கள் தங்களது
சகஜ வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் இருக்கின்றனர் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு மேலும் பணியாளர்களை அமர்த்துமாறு அரசை வலியுறுத்தியுள்ளார்
மன்னார் மறைமாவட்ட முதன்மைக் குரு சூசை விக்டர். மேலும், நிலக்கண்ணி வெடிகளை அகற்றும்
பணிகளைத் தாமதப்படுத்துவது குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கின்றது என்று யாழ்ப்பாண மறைமாவட்ட
குருக்கள் கழகத் தலைவர் அருட்பணி அருளானந்தம் யாவிஸ் தெரிவித்தார்.