பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கும் போது, பெற்றோர் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் - அயர்லாந்து
ஆயர்கள்
ஏப்ரல் 07,2011. பள்ளிகள் இளையோரின் எதிர்கால எண்ணங்களையும், பழக்க வழக்கங்களையும் மாற்றும்
கருவி என்பதால் அந்தப் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கும் போது, பெற்றோர் அதிகம் கவனம் செலுத்த
வேண்டும் என்று அயர்லாந்து ஆயர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். குடும்பங்களும், பங்குத்
தளங்களும் கத்தோலிக்கப் பள்ளிகளுடன் இணைந்து செயல்பட வேண்டுமெனும் நோக்கத்துடன் அவைகளை
ஒருங்கிணைக்கும் ஓர் அமைப்பை 2010ம் ஆண்டு அயர்லாந்து ஆயர் பேரவை உருவாக்கியது. இந்த
ஆயர் பேரவையின் அமைப்பு இப்புதனன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், கத்தோலிக்கப் பள்ளிகளின்
எதிர்காலம் பற்றிய சிந்தனைகளை எழுப்பியபோது, பெற்றோருக்கு தனிப்பட்டதொரு விண்ணப்பத்தை
வெளியிட்டது. கத்தோலிக்கப் பள்ளிகள் மனிதரின் விசுவாசத்திற்கும், சிந்திக்கும் திறமைக்கும்
தகுந்த மதிப்பு அளிப்பதால், இப்பள்ளிகள் அயர்லாந்தில் இன்னும் பலரால் விரும்பி தேர்வு
செய்யப்படுகின்றன என்று இவ்வறிக்கை கூறுகிறது.இப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், பயின்று
வரும் மாணவர்கள் இங்கு கற்றுக் கொண்டவைகளின் அடிப்படையில் அயர்லாந்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு
உழைப்பார்கள் என்ற நம்பிக்கையும் இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.