சத்ய சாய் பாபாவின் உடல் நலத்திற்காக கிறிஸ்தவர்கள் எழுப்பி வரும் செபங்கள்
ஏப்ரல் 06,2011. இந்து மதத் தலைவர்களில் மிகவும் புகழ்பெற்றவரும், மனிதாபிமானச் செயல்களில்
அதிகம் ஈடுபட்டவருமான சத்ய சாய் பாபாவின் உடல் நலத்திற்காக கிறிஸ்தவர்களும் தங்கள் செபங்களை
எழுப்பி வருகின்றனர். மார்ச் 28ம் தேதி நோயுற்று, மருத்துவ மனையில் உள்ள 84 வயதான
சாய் பாபாவின் உடல் நிலை தற்போது ஓரளவு நிலைபெற்றுள்ளதென மருத்துவர்கள் கூறியுள்ளனர். பல
ஏழை மக்களுக்கு இலவச இருதய அறுவைச் சிகிச்சைகளையும், ஏழை மாணவர்களுக்கு கல்வி வசதிகளையும்
செய்துள்ள சாய்பாபாவின் உடல் நலனுக்காக தான் செபித்து வருவதாக நெல்லூர் மறைமாவட்ட ஆயர்
மோசஸ் பிரகாசம் கூறினார். ஹிந்துப்பூரில் உள்ள ஒரு இயேசு சபை கல்லூரியின் முதல்வரான
அருள்தந்தை சந்தனசாமி, சாய்பாபாவின் உடல் நலனுக்காக, தன் கல்லூரியில் அனைத்து மாணவர்களும்
இணைந்து செப வழிபாடு நடத்துவதற்குத் திட்டமிட்டு வருகின்றனர் என்று கூறினார். சாய்பாபாவினால்
புகழ்பெற்ற புட்டப்பருத்திக்கருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் பணிசெய்து வரும் இயேசு சபை
குரு செல்வராஜ், கடந்த ஞாயிறன்று திருப்பலி நேரத்தில் சத்ய சாய்பாபாவுக்கென செபங்கள்
எழுப்பப்பட்டன என்றும், இத்திருப்பலி நேரத்தில் அங்கிருந்த இந்துக்களும் இக்கருத்துக்காகச்
செபித்தனர் என்றும் கூறினார்.சாய்பாபா நோயுற்றிருப்பதால் இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்ட
தெலுங்கு புத்தாண்டு விழா ஆடம்பரங்கள் அதிகம் இல்லாமல் கொண்டாடப்பட்டதென அருள்தந்தை செல்வராஜ்
மேலும் கூறினார்.