என் சகோதரரைக் கொன்றவர்களை நாங்கள் மன்னித்து விட்டோம் – பாகிஸ்தானில்
கொலையுண்டShabbaz Bhattiயின் சகோதரர்
ஏப்ரல் 06,2011. கிறிஸ்தவ விசுவாசம் எங்களுக்குச் சொல்லித் தந்துள்ளதுபோல், என் சகோதரரைக்
கொன்றவர்களை நாங்கள் மன்னித்து விட்டோம் என்று பாகிஸ்தானின் மறைந்த அமைச்சர் Shabbaz
Bhattiயின் சகோதரர் Paul Bhatti கூறினார். மார்ச் 2ம் தேதி கொல்லப்பட்ட Shabbaz Bhattiயின்
மரணத்தை நினைவு கூறும் வகையில் உரோம் நகரில் Sant'Egidio என்ற அமைப்பினரால் அண்மையில்
நடத்தப்பட்ட ஒரு கருத்தரங்கில் பேசுகையில் Paul Bhatti இவ்வாறு கூறினார். எடுத்துக்காட்டான
வாழ்வுக்கும், நன்னெறிக்கும் வழிகாட்டியாக இருந்த ஒரு நல்ல தலைவரை நாங்கள் இழந்து விட்டோம்
என்று பாகிஸ்தான் ஆயர் பேரவைத் தலைவராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பைசலாபாத் ஆயர்
Joseph Coutts இக்கருத்தரங்கில் கூறினார். இச்சம்பவத்தையொட்டி, தன் செபங்களையும்,
ஆதரவையும் தெரிவித்தத் திருத்தந்தைக்கு தங்கள் குடும்பத்தின் சார்பிலும், பாகிஸ்தான்
மக்கள் சார்பிலும் நன்றி தெரிவிப்பதாக Paul Bhatti கூறினார். இதற்கிடையே, கொலையுண்ட
பாகிஸ்தான் அமைச்சர் Shabbaz Bhattiயின் மறைவால் காலியாகியுள்ள பாராளுமன்ற இடம் யாருக்கு
வழங்கப்படும் என்பதில் கேள்விகள் எழுந்துள்ளன.சிறுபான்மையினருக்கென ஒதுக்கப்பட்டுள்ள
இந்த பொறுப்பிற்கு இந்துத் தலைவரான Khatu Mal Jeewan அல்லது கத்தோலிக்கரான Javed Michael
என்ற இருவரில் யார் வரக்கூடும் என்று கேள்விகளும், பிரச்சனைகளும் எழுந்துள்ளன.