ஏப்ரல் 05,2011. இலங்கையின் வடக்கே வன்னிப் பகுதியில் இறுதிச் சண்டைகளின் போது இராணுவத்தினரிடம்
சரணடைந்து புனர்வாழ்வுப் பயிற்சிகளை முடித்துக்கொண்ட 206 பேர் கொண்ட மேலும் ஒரு தொகுதி
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் வவுனியாவில் வைத்து குடும்ப உறவினர்களிடம் கையளிக்கப்பட்டார்கள்.
இவர்களில் பெண் ஒருவரும் அடங்குவார். வீட்டுத் தலைவனின் உதவியின்றி வாழும் பெண்களைத்
தலைவியாகக் கொண்ட குடும்பங்களுக்கு சமூகம் உதவி செய்ய வேண்டும் என புனர்வாழ்வு நிலையங்களில்
வாடுபவர்கள் எதிர்பார்ப்பதாகவும், ஆனால் உதவிக்குப் பதிலாக துன்பங்களே அவர்களுக்குச்
சமூகத்தினரால் செய்யப்படுவதை அறிந்து மிகுந்த கவலையடைந்திருப்பதாகவும் ஊடகம் ஒன்றிற்கு
ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, கணவனையும், குடும்ப வருமானத்துக்கான உழைப்பாளியையும்
புனர்வாழ்வு நிலையங்களில் பிரிந்து பிள்ளைகளுடனும், தனிமையிலும் வாழ்கின்ற பெண்கள் பல்வேறு
பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதாக, விடுதலை செய்யப்பட்ட தனது கணவனை அழைத்துச்
செல்வதற்காக வந்திருந்த இளம் மனைவி ஒருவர் தெரிவித்தார். இன்னும் 4,600 பேர் வரையில்
புனர்வாழ்வுப் பயிற்சி பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது