2011-04-04 16:57:34

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இறந்ததன் 6ம் ஆண்டு நிறைவு நினைவு கூரப்பட்டது


ஏப்ரல் 04, 2011 மூவேளை செப உரையின் இறுதியில், திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இறந்ததன் ஆண்டு நினைவு நாள் சனியன்று இடம்பெற்றதையும் குறிப்பிட்ட பாப்பிறை, அந்நாளில் அவரைச் சிறப்பான விதத்தில் நினைவுகூர்ந்து செபித்ததாகவும் எடுத்துரைத்தார்.
அத்திருத்தந்தையின் முத்திப்பேறு அறிவிப்பு, வரும் மாதம் இடம்பெற விருப்பதால், அவருக்கான இறந்தோர் நினைவுத் திருப்பலியைப் பாரம்பரியமாக கொண்டாடுவது போல் தான் நிறைவேற்றவில்லையெனினும், அவருக்காகத் தனிப்பட்ட விதத்தில் செபித்தேன், நீங்களும் செபித்திருப்பீர்கள் என நம்புகிறேன் என்றார் பாப்பிறை.
இத்தவக்காலம் முழுவதும் நாம் உயிர்ப்புப் பெருவிழாவிற்கென தயாரித்து வரும் போது, முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் முத்திப்பேறு பட்டமளிப்பு விழா மற்றும் அவரின் பரிந்துரைகளுக்காக நம்மை அவரிடம் மேலும் ஒப்படைக்கும் மகிழ்ச்சியை நோக்கியும் சென்று கொண்டிருக்கிறோம் என்பதையும் நினைவூட்டினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
தொழிலாளர் தினமான மே மாதம் ஒன்றாந்தேதி உரோம் நகரில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நிறைவேற்றும் திருப்பலியில் முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட உள்ளார்.








All the contents on this site are copyrighted ©.