2011-03-31 15:57:15

பாகிஸ்தான் சிறையிலிருக்கும் ஆசியா பீபி திருத்தந்தையைச் சந்திக்க ஆவல்


மார்ச் 31,2011. பாகிஸ்தானில் Sheikupura சிறையில் இருக்கும் ஆசியா பீபி என்ற கிறிஸ்தவப் பெண் திருத்தந்தையைச் சந்திக்கத் தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
தேவ நிந்தனை குற்றத்திற்காக மரண தண்டனை சுமத்தப்பட்டு, சிறையில் இருக்கும் ஆசியா பீபியை அவரது கணவர் அண்மையில் சென்று சந்திக்கும்போது, அவர் தனது விருப்பத்தை வெளியிட்டார்.
தவக்காலத்திற்கான உண்ணாநோன்பை சிறையில் மேற்கொண்டுள்ள ஆசியா பீபி, மிகுந்த களைப்புடன் காணப்பட்டார் என்று அவரது கணவர் கூறினார்.
திருத்தந்தையைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், அச்சந்திப்பை தான் இப்போது மேற்கொண்டுள்ள இந்தச் சிலுவையின் பயனாகத் தனக்குக் கிடைத்த உயிர்ப்பாக இருக்கும் என்று ஆசியா பீபி கூறியதாக அவரது கணவர் தெரிவித்தார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன்னைப் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து அறிந்து வருவதையும், தன்னைப் பற்றி தன் உரையில் குறிப்பிட்டதையும் தான் அறிந்தபோது, தொடர்ந்து வாழ வேண்டும் என்ற உந்துதலும், நம்பிக்கையும் தனக்குப் பிறந்ததென ஆசியா பீபி தன் கணவரிடம் கூறியுள்ளார்.திருத்தந்தையை நேரில் சந்தித்து, அவருக்குத் தன் நன்றியைக் கூறுமளவுக்குத் தான் வாழ்ந்தாலே போதும் என்ற தன் ஆவலையும் ஆசியா பீபி வெளியிட்டதாக அவரது கணவர் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.